சென்னை: ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த முதல் கரும்புலி வீரர் மில்லர், தமிழீழ வரலாற்றின் நெஞ்சை நெகிழவைக்கும் மாபெரும் தியாகத்தின் உருவம். அவரின் பெயரை ஐபிசி நிறுவனம் “மில்லர்” என்னும் பெயரில் திரைப்படம் தயாரிப்பதாகச் செய்திகளில் வெளியாகியுள்ளது.
அவரின் பெயரைப் பொழுதுபோக்கு நோக்கில் பயன்படுத்துவது, தமிழர் உணர்வுகளை மிதித்து, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தையும் இழிவு படுத்துவதாகும். எனவே, ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும். தமிழர் தியாக வரலாற்றை, எந்த வகையிலும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது.
இதுபோன்ற முயற்சிகளை எதிர்காலத்தில் மேற்கொண்டாலும், எங்கள் கட்சி உலகெங்கிலும் பரவி வாழும் 12 கோடி தமிழர்களிடமும் ஆதரவு திரட்டி, மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
