தூக்கமின்மையால் அவதிப்படும் சஷீந்திர ராஜபக்ஷ! – Athavan News

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள், தூக்கமின்மைக்கு மருத்துவ உதவி வழங்கப்படாவிட்டால், அவர் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த ஆண்டு ஒக்டோபரில் பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு பரீட்சையை ராஜபக்ஷ எழுதவிருப்பதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனவே, தனது கட்சிக்காரரை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பது அவர் பரீட்சைக்கு வருவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்றும், பிணை வழங்குவதைத் தீர்மானிப்பதில் இதை ஒரு முக்கிய காரணியாகக் கருதுமாறும் நீதிமன்றத்தில் கோரினர்.

எவ்வாறெனினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான், ஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை தொடர்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ராஜபக்ஷவை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply