கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கரூரில் நடந்தது பெரும் துயரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,
கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்.
மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் உள்ளேன்.
செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளை பிறப்பித்தபின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு சென்றேன்.
குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் அறிவித்து அவற்றை உடனடியாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.
இதற்கிடையே, சமூகவலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள் .
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நமது தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளை தவிர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனவே நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்தப்பின் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
அத்தகைய நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். மனித உயிர்களே அனைத்திற்கும் மேலானது. மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது.
அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு எப்பொழுதுமே நாட்டிற்கு பலவகைகள் முன்னோடியாக இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.