சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ஜனாதிபதி ஜின்பிங் வரவேற்றார்.
குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள பிரதமர் கே.பி. ஒலி, மாலத்தீவு ஜனாதிபத் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் லையிங், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் ஜனாதிபத் டோகாயேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது , இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர்.
இதேவேளை குறித்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேசி, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை உலக அமைதி மற்றும் மனிதகுலத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன என்றும், அதை வேரறுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதையும், அதில் இரட்டை வேடம் போடுவதையும் இந்தியா ஏற்காது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.