பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக மக்களின் கருத்துக்களைத் திரட்டி, நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை, பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தேவையற்றது என்றும் வலியுறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களின் கையெழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகள் மூலம் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டதுடன்,  கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post Views: 0

நன்றி

Leave a Reply