பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது:
2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது போன்றவற்றால் நிறுவனம், ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து மறுபணியமர்த்த உள்ளது. ஆனால், இந்த செயல்முறையின் விளைவாக வேலைவாய்ப்பில் ஒரு பகுதி அதாவது 12,200 வேலைகள் குறைக்கப்படும்.
எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றத்தை உரிய கவனத்துடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி துறை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் முடிவெடுப்பதிலும், திட்டத்தை தொடங்குவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக டிசிஎஸ் தலைமை நிர்வாகி கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.