பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பேருந்தின் பெறுமதி 5 கோடி ரூபாவிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், சுமார் 2.5 கோடி ரூபா பெறுமதியான மற்றைய பேருந்து மொனராகலை – கொழும்பு இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
‘பெக்கோ சமன்’ கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பேருந்துகளில் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இரண்டு பேருந்துகளும் வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பேருந்துகள் தனக்குச் சொந்தமானவை என ‘பெக்கோ சமன்’ ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
