
கட்டார் பிரதமர், தற்போதைய போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். ஈரான் தாக்குதல்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் கடுமையாக கண்டனம்.
ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தலைமையிலான கட்டார் அரசு, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கு உடனடி முடிவு வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடானுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தற்போதைய போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்தி, இந்த மோதலை பிராந்திய அளவுக்கு விரிவாக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். போர் மேலும் விரிவடைந்தால், அது எந்தவிதத்திலும் நிலைத்தன்மையை ஏற்படுத்தாது எனவும் கூறினார்.
அதே நேரத்தில், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்ற ஈரானின் கூற்றை “ஏற்றுக்கொள்ள முடியாததும், நியாயமற்றதும்” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக, ரச் லஃபான் (Ras Laffan) எரிவாயு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவர் கவலை தெரிவித்தார். அந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான கட்டமைப்பை குறிவைத்ததாகவும், இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
