யாங்கூன்: மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்குள்ள பல ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் எதிர்ப்புப் படைகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரக்கைன் மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகள் மீது 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை மியான்மர் ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியதாக ‘அராகன் ஆர்மி’ கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் பள்ளி விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் 19 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் 15 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவர்கள் 19 பேர் இறந்துள்ளனர். இதற்கு ஆளும் ராணுவம்தான் பொறுப்பு என்று கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும், ‘மியான்மர் நவ்’ என்ற செய்தி நிறுவனம், பள்ளிகள் மீது 500 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை வீசியதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா.வின் குழந்தைகள் விவகார பிரிவு யுனிசெப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.