முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில்!

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இன்று (26) வரை விளக்கமறியலில் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து நீதிமன்றில் முன்னிலபை்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 26 (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply