ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட வரைவு யோசனை, தற்போது, சட்ட மாஅதிபரின் பரிசீலனையில் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 500 பேரும், கணவர்மாரை இழந்த 150 பெண்களும் பாதிக்கப்படுவர்.
சராசரியாக, ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவியருக்கு ஓய்வூதியத்திற்காக மாத்திரம், அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 27 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுமானால், ஒரு தொகை நிதியை சேமிக்கமுடியும்.
எனினும், இது நாட்டை நேசிக்கும் பல படித்த மற்றும் அர்ப்பணிப்புள்ளவர்கள், அரசியலில் நுழைவதைத் தடுக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டி, தங்கள் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் நோக்கில் முன்கொணரப்படும் யோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமாக எதிர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.