யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தியில் புதிய மைல்கல்: காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைப்பு ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிக்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எரிபொருள் விநியோகத்தில் ‘கியூ.ஆர்’ (QR) முறைமை: உலகளாவிய போர்ப் பதற்றங்கள் காரணமாக ஏப்ரல் மாத சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக விளக்கமளித்தார்.

காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம்:

வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், அங்கிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற வழிவகை செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு:

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வீதிகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முழுமையாகப் புனரமைக்கப்படும் என ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மேம்பாடு:

பிரபல சுற்றுலாத் தலமான கசூரினா கடற்கரைக்குச் செல்லும் காரைநகர் சுற்றுவட்ட வீதி சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் புனரமைக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கவும் உதவும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பேரிடர் மேலாண்மை:

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ (Dithwa) பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிக் கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க மத்திய அரசாங்கத்தால் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply