கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி ரயிலில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளீடு செய்யாமல் ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகளை ரயிலில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வெற்று ஆசனங்களுடன் ரயில் சென்றதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர் .
இதன் காரணமாக நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கி செல்லும் பயணிகள் இன்றைய தினம் (11) பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதோடு ரயில் நிலையத்தில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் முரண்பட்ட பின்னர் அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினர்.
ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்து ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இதன் காரணமாக குறித்த சிக்கல் எழுந்துள்ளது என குற்றம் சுமத்துகின்றனர்.
இதனால் இன்றைய தினம் எல்ல ஒடிசி ரயிலில் பயணிக்க முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில் மீண்டும் சாதாரண பயணசீட்டை 300 ரூபாய்க்கு பெற்றுக்கொண்டு கண்டி முதல் எல்ல வரை செல்லும் பொடி மெனிக்கே ரயிலில் எல்ல வரை தங்கள் பயணங்களை தொடர்ந்தனர்.
இவர்கள் இணையத் தளங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கி பயணிப்பதற்கு ஆசனங்களை சுமார் 6000 ரூபாய்க்கு அதிகமாக செலுத்தி முன்பதிவு செய்து அமர்ந்து கூட செல்ல முடியாத காரணத்தால் கடும் அதிருப்தியை வெளியிட்டனர் .
இதில் பாதுகாப்பற்ற வகையில் ரயில் மிதிபலகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நின்றவாறு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.