வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பரஸ்பரவரி விதிக்கப்படும் என கூறியிருந்தார். இதன் காரணமாக அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அமெரிக்காவுக்கு ஓராண்டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் மருந்து பொருட்கள், எரிசக்தி, கனிமங்கள், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறிய ட்ரம்ப் இதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கும் இந்தியா நிதி அளிக்கிறது’’ என குற்றம் சாட்டினார். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை முதல் 25% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நல்ல நாடாக இந்தியா இல்லை. ஏனென்றால், இந்தியா அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
ஆனால், அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக வரியை விதிக்கிறது. இதனால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களை விற்க முடியவில்லை. அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் வரியை மேலும் உயர்த்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.