இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இராமேஸ்வர விசைப்படகு மீனவர்களால் இன்று காலை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யத் தவறும் பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.