25 தொகுதிகளா? 35 தொகுதிகளா? தி.மு.க.–காங்கிரஸ் இடையே இன்று முக்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – Sri Lanka Tamil News

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரு தரப்பினரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸின் தொடக்க நிலைப்பாடாக இருந்தது.

ஆட்சியில் அதிகார பங்கீடு வேண்டுமென ஆரம்பத்தில் வலியுறுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி பொருந்தாது என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, அந்த கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டது. எனினும், தொகுதி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் தரப்பு உறுதியாக உள்ளது.

தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகளும், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் சமீபத்தில் கனிமொழியை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவரம் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே 25 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கலாம் என்ற முன்மொழிவை தி.மு.க. தரப்பு முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு காங்கிரஸ் இணக்கம் தெரிவித்தால் உடனடியாக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 35 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை இழுபறியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கடைசி நாளாக இருப்பதால், அதற்குள் இரு கட்சிகளும் சுமுகமான முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை எளிதில் முடிவுக்கு வருமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய கேள்வியாக உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply