சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக காலை முதலே சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
சீமானுக்கு வாழ்த்துக் கூற வருகை தந்த தொண்டர்களுக்காக அவரது வீட்டில் தடபுடலான கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 3 ஆயிரம் பேருக்கு விருந்து தயாரானது. இதையடுத்து நீலாங்கரைக்கு வந்த தொண்டர்கள் வரிசையாக சீமானை சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர்களுக்காக மீன் வறுவல், நல்லி எழும்பு குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் பக்கோடா என 13 வகையான அசைவ உணவுகளும், சாம்பார்,
ரசம், வடை, பாயாசம், பொறியலுடன் 9 வகையான சைவ உணவுகளும் பரிமாறப்பட்டன. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் சீமானுக்குசமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
