கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் நாரஹேன்பிட்ட மாவட்ட அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 70/- ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
தண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள், இந்த குற்றத்திற்காக ஐந்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 6,00,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.