மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரூ.77,000 கோடி மதிப்பிலான முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்ற நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.14,610 கோடியை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். பாரின் போர்ட்போலியோ இன்வெஸ்டார் (எப்பிஐ) எனும் அன்னிய முதலீட்டாளர்கள் பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக கணிசமான அளவில் முதலீட்டை திரும்ப பெற்றனர்.
அதன்படி, ஜூலையில் ரூ.17,700 கோடி, ஆகஸ்டில் ரூ.34,990 கோடி, செப்டம்பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்பிலான தொகையை எப்பிஐ வெளியே எடுத்தனர். இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு ஊக்கம்பெற்று வருவாய் அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன் காரணமாக, அவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.14,610 கோடியை இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். பங்குச் சந்தையில் அண்மைக்காலமாக முதலீட்டு வரத்து அதிரித்துள்ள போதிலும், அன்னிய முதலீட்டாளர்கள் 2025-ல் இதுவரையில் ரூ.1.4 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
