ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், “அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது.
‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அண்ணாவின் வார்த்தைகளை இன்று நினைவூட்டுகிறேன். அந்த வழியில்தான் நாம் செயல்பட வேண்டும்.
முன்னாள் முதலல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நூறு ஆண்டுகளுக்கு கட்டமைக்க வேண்டியதை தான், நான் செப்.5-ல் மனம் திறந்து பேசினேன். இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொண்டர்களின், பொது மக்களின் கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு இயக்கம் வலிமை பெறுவதற்கு, 2026-ல் வெற்றி பெறுவதற்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும்.” என கூறினார்.