அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்பையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித் ஹேரத், அமெரிக்காவில் நடைபெறும் UNGA கூட்டத்திற்கு இடையே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளூர் நேரப்படி இன்று (24) பிற்பகல் 3:15 மணிக்கு பொதுச் சபையில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி ஜனாதிபதி அநுரகுமார, தனது விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.