செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை AI தொழில்நுட்பம் ஊடாக நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றித் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் இன்று நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரையும் உடனடியாகக் கைது செய்யப் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இச்சம்பவம் குறித்துச் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறும், இணையவழி மோசடிகள் குறித்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் அச்சப்படாமல் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
The post உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.
