காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பேட்டியில் , “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டம் எளிதான வழியாக இருந்தாலும் அல்லது கடினமான வழியாக இருந்தாலும் அது நிச்சயம் அடையப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் காசா- இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தின் கீழ் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹாமாஸ் ஒப்புக்கொண்டதுடன் ஏனைய நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் ஹமாஸின் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் ஹமாஸ் விரைவாக நகர வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் நேற்று(04) காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இந்த தாக்குதல்களின் விளைவாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை அடுத்து நாளைய தினம் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினருக்கிடையே எகிப்தில் மறைமுக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.