காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்ற நோக்கில் இஸ்ரேல் தனது ‘ஆக்கிரமிப்பு’ நடவடிக்கையை அரங்கேற்றவும் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் நடவடிக்கை, காசாவின் நிலை, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு, உள்நாட்டில் நிலவும் ஆதரவு, எதிர்ப்பு ஆகியனவற்றை தெளிவாகப் பார்ப்போம்.
முழுமையாகக் கைப்பற்றுதல் என்றால் என்ன? – முதலில், காசாவை ழுமையாகக் கைப்பற்றுதல் அல்லது ஆக்கிரமித்தல் என்றால் என்ன என்று சற்று தெளிவாகப் பார்ப்போம். கடந்த அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் நடத்திவரும் பதில் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத் தாக்குதல் உயிரிழப்புகளோடு இப்போது பட்டினிச் சாவும், மரண எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்படாமல் எஞ்சியுள்ளது அப்பகுதியின் 25% மட்டுமே. அங்குதான் போரில் உயிர் பிழைத்த மிச்சம் மீதி பேர் தஞ்சமடைந்துள்ளனர். எஞ்சியுள்ள இந்தப் பகுதிக்குள் ராணுவப் படைகளை குவித்துவிட்டால், காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றியதாகிவிடும். இதன் மூலம் ராணுவத்தினால் மட்டுமல்ல, அரசியல் ரீதியாக, மத, கலாச்சார ரீதியாக காசாவை இஸ்ரேல் கட்டுப்படுத்தும்.
ஒரு பக்கம் உணவுப் பஞ்சம், மறுபக்கம் காசா முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இஸ்ரேலின் முடிவு. இவற்றுக்கு இடையே பசித்த வயிறும், வறண்ட கண்களுமாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு துயரத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறார்கள் காசா மக்கள். இதோ இந்தச் செய்தியை பதிவு செய்த நேரத்தில் கூட, காசாவில் பட்டினியால் இருவர் உயிரிழந்ததாக அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ‘காசா ஹியூமேனிட்டேரிய ஃபண்ட்’ (GHF) முகாம் உறுதி செய்திருந்தது. பட்டினியால் காசாவாசிகள் மட்டுமல்ல அங்கே பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 கோட்பாடுகள்: இந்தச் சூழலில், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த, ஹமாஸ்களை ஆயுதமற்றவர்களாக்க வேண்டும், பிணைக் கைதிகளை மீட்க வேண்டும், காசா பகுதியிலிருந்து படைகளை படிப்படியாக திரும்பப் பெற வேண்டும், அப்பகுதியை இஸ்ரேல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும், அங்கே ஹமாஸ், பாலஸ்தீன தலையீடு இல்லாத ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 5 கோட்பாடுகளில் உடன்படுவதாக இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது. விதவிதமான வார்த்தைகளில் சொல்லப்பட்டாலும், இது காசாவை கைப்பற்றுவது தவிர வேறொன்றும் இல்லை.
ஆனால், இந்த முடிவுகளை இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் கடுமையாக எதிர்த்துள்ளார். இது ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் பேராபத்தான முடிவு என்று அவர் விமர்சித்துள்ளார்.
சீனாவும் இஸ்ரேலின் முடிவு மீது தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “காசா பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது. காசாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்ற அபாயகரமான முடிவை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.
காசாவில் தற்போது நிலவும் மனிதாபிமான சிக்கலைத் தீர்க்க சரியான வழி, பிணைக் கைதிகள் விடுவிப்பை உறுதி செய்வதோடு, உடனடியாக போர் நிறுத்தத்தை அமலுக்குக் கொண்டு வருவது. காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து இஸ்ரேலுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிலும் எதிர்ப்பு: நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு உள்நாட்டிலும் வலுத்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே , தன்னார்வலர்கள் நடத்திய பேரணியில், “போரை உடனடியாக நிறுத்த நெதன்யாகுவுக்கு அறிவுறுத்துங்கள் ட்ரம்ப். பிணைக் கைதிகள் நலனை, ராணுவ வீரர்களின் உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த முடிவை அவர் கைவிடுமாறு அறிவுறுத்துங்கள்.” என்று கோரினர்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக முன்னாள் இயக்குநர் ஆலன் லியல், “காசாவை கைப்பற்றும் திட்டம் இஸ்ரேலை இன்னமும் தனிமைப்படுத்தும். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும். ஆனால், இஸ்ரேல் அதற்கு எதிர்மறையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் காசா விவகாரத்தில் சொல்வதை இஸ்ரேல் புறக்கணிக்கிறது. ஒரு தூதரக அதிகாரியாக இருந்த அனுபவத்தில், இஸ்ரேலின் செயலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இஸ்ரேல் அரசுக்கான துணிச்சல், அமெரிக்கா எந்த முடிவு எடுத்தாலும் ஆதரிக்கும் என்ற எண்ணத்திலிருந்து வருகிறது. ஆனால், காசா பிரச்சினையில் இஸ்ரேலின் நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச சமூகம் வலுவான எதிர்ப்புக் குரலை கொடுத்தால், அமெரிக்கா அதற்கு செவி சாய்த்தே ஆகவேண்டும்” என்று கூறியுள்ளார்.
எதிர்ப்புகள் இப்படியிருக்க, இஸ்ரேல் முயற்சியை ஆதரித்து கடந்த ஜூலை 30-ல் பிரம்மாண்ட பேரணி ஒன்று அங்கே நடந்துள்ளது. காசாவில் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள் இந்தப் பேரணியை நடத்தியுள்ளன. காசா எல்லை வரை இவர்கள் பேரணியாகச் சென்றுள்ளனர். காசாவின் வடக்கு முனையில் இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை ஒட்டி, காசாவில் யூதர்களை குடியேற்ற வேண்டும் என்று கோரிக்கையை ஆதரித்து 1,000 குடும்பங்கள் கையெழுத்திட்டுள்ளன.
மவுனம் காக்கும் ட்ரம்ப்: காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சிப்பதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றுவதை ஆதரிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட, “அது முழுக்க முழுக்க இஸ்ரேலை சார்ந்தது” என்று பட்டும் படாமலும் சொல்லியிருந்தார். உண்மையைச் சொல்வதென்றால், போரை நிறுத்துவேன் என்று முழுங்கும் ட்ரம்ப், இதுவரை வெளிப்படையாக இஸ்ரேலுக்கு எவ்வித அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் நிபுணர்கள்.
சிக்கல் என்னவென்று, தீர்வும் இதுவல்ல என்று தெரியும், ஆனாலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையில் பேசியபோது, “நாங்கள் எங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம். காசா மக்களை ஹமாஸின் கோரமான பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க விரும்புகிறோம். காசாவை நாங்களே வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், அங்கே பாதுகாப்பு வளையத்தை உருவாக்க விரும்புகிறோம். காசாவை ஆட்சி செய்யவும் விரும்பவில்லை.” என்று சூசக உரையாற்றியுள்ளார்.
காசாவில் கள நிலவரத்தைச் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர், காசாவின் காட்சி ஊழிக்காலத்தின் சாட்சி என்று விவரித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒன்றை பதிவு செய்யத் தோன்றுகிறது. காசாவில் 1-ல் இருந்து 5 வயதுக்குள் இருக்கும் 12,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதம் உள்ளவர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் பெரும்பகுதி எல்லைகளை தடுக்கப்பட்டு கிடக்கிறது.
வான்வழியாக இரைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் இடிபாடுகள், சிதிலமடைந்த கட்டிடங்களில் சிக்கிக் கொண்டு கிடக்கிறது. அதை எடுக்கச் சென்றாலும் மரணம், எடுக்காவிட்டாலும் மரணம் என்று அலைந்து திரிகிறார்கள் மக்கள். நாம் வாழும் இதே பூமியில் தான் அவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் போல் போரினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற பேரும் இருக்கிறார்கள். ஒரு துண்டு நிலம், நீங்கள் தூக்கிப் பிடிக்கும் ஏதோ மதம் அல்லது ஏதேனும் கொள்கைகளுக்காக உயிர்களைப் பலி கொடுக்கும் ரத்தச் சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களாக!