13
காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் சிகிச்சைக்காகக் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பல் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது அந்தக் கப்பலில் மொத்தம் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட துரித மீட்பு நடவடிக்கையின் மூலம் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 32 பேர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்டுள்ள 32 பேரில் சிலருக்குக் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் காயம் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மீட்புப் பணிகளை மற்றும் ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு மற்றும் கடற்படைத் தலைமையகம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விபத்து நிகழ்ந்த பகுதி 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் என்பதால், கடற்படையின் விசேட சுழியோடிப் பிரிவினர் (Divers) அங்கு விரைந்துள்ளனர். தற்போது நிலவும் கடலில் கொந்தளிப்பான வானிலை மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக இருப்பதாகக் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திரக் கோளாறு காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ள ஈரான் தமது நாட்டு வீரர்களைத் துரிதமாக மீட்டமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கும், கடற்படையினருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
#IRISDen #IranNavy #Shipwreck #Galle #KarapitiyaHospital #VijithaHerath #RescueOperation
