செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்து ஒன்றை அணிந்திருந்த மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், மே மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற்றன. அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள், உரிய அதிகாரிகளின் முன்னிலையில் இன்று மீளத் தொடங்கப்பட்ட போதே இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இவற்றுடன், அதே பகுதியில் இருந்து செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனம் காணப்பட்டுள்ளதுடன், காவற்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவற்றைச் சுத்தம் செய்து அடையாளப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 13 நாட்களுக்குள் மட்டும் மொத்தம் 22 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி, நாணயக் குற்றிகள், ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு மற்றும் இன்றைய தினம் மீட்கப்பட்ட காசு வடிவிலான தாயத்து உட்பட மொத்தம் 17 பிற பொருட்களும் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம், இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 262 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply