நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது.
அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அந்தத் தளத்திற்கான அணுகலைத் தற்காலிகமாக முடக்குவதற்குப் போதுமான காரணங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, அரசாங்கத்தின் உத்தரவானது தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகவும், அந்த முடிவை எதிர்த்து டெலிகிராம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டவாறு இதில் உரிய பரிசீலனை இன்மை போன்ற குறைபாடுகள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டது.
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு முன்னதாக மத்திய அரசு விதித்த தற்காலிகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, டெலிகிராம் புதன்கிழமையன்று டெல்லி மேல் நீதிமன்றத்தை நாடியிருந்தது.
அக்கோரிக்கையை நிராகரித்து கட்டுப்பாடுகளை உறுதி செய்த நீதிமன்றம், டெலிகிராம் மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கமும் தகவல்களும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-வின் வரம்பிற்குள் வருவதாகத் தெரிவித்தது.
இந்தியாவின் தேசிய தேர்வு முகமை (NTA), அந்தத் தளத்தில் இயங்கி வந்த ஒரு பெரிய அளவிலான மோசடி வலையமைப்பை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஜூன் 22 வரை இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
