
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படை நடவடிக்கைகளில் குறைந்தது 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 15 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல்களில், தீவிரவாதிகள் பொதுமக்களையும் குறிவைத்து தாக்கியதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய நாளில் நடைபெற்ற தனித்தனி ராணுவ நடவடிக்கைகளில் 41 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்திருந்தது.
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான பாலுச் லிபரேஷன் ஆர்மி (BLA) பொறுப்பேற்றுள்ளது. மாகாணம் முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், 15 மணி நேரத்திற்கும் மேலாக நடவடிக்கைகள் நீடித்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி, எந்த நகரத்தையும் அல்லது முக்கிய மூலோபாய இடங்களையும் கைப்பற்றும் முயற்சிகள் வெற்றிகரமாக தடுக்கப்பட்டன.
ராணுவத்தின் ஊடகப்பிரிவு ISPR வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதல்கள் வெளிநாடுகளில் இருந்து வழிநடத்தப்பட்டதாகவும், இந்திய ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
குவெட்டா, மஸ்துங், நோஷ்கி, தல்பந்தீன், காரான், பஞ்ச்கூர், தும்ப், க்வாதர் மற்றும் பஸ்னி உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். க்வாதரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம்மீது நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மருத்துவமனைகள் அவசர நிலைக்கு மாற்றப்பட்டன.
பாலுசிஸ்தான் பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப்பெரியதும், பொருளாதார ரீதியாக பின்தங்கியதும் ஆன மாகாணமாகும். இங்கு பல ஆண்டுகளாக இன அடிப்படையிலான பிரிவினைவாத கிளர்ச்சி நீடித்து வருகிறது.
