காசா: இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த உடல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அக்டோபர் 10-ம் தேதி அமெரிக்க மத்தியஸ்தத்தின் முயற்சியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் சமீபத்திய முன்னேற்றமாக இது நடந்துள்ளது. முன்னதாக 21 பிணைக்கைதிகளின் உடல்களை போர் நிறுத்த விதிமுறைகளின் கீழ் இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் இருந்தபோதிலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அனுப்பியதாக காசா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் போர் நிறுத்தத்திலிருந்து இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த 285 உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காசாவிற்கு கொண்டு சென்றுள்ளது. இருப்பினும், டிஎன்ஏ சோதனை கருவிகள் இல்லாததால் உடல்களை அடையாளம் காணுவது சிக்கலாகி உள்ளது என காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
