46
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுவை மேலதிக விசாரணைக்காக 13ஆம் திகதி மீண்டும் அழைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்,
காவற்துறை மா அதிபர்,
சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் தனது மனுவில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தாம் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என அறிவித்து, அதனை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
