பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் (NHS) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு தமிழ் மருத்துவரின் குடும்பம், தற்போது அந்நாட்டின் கடுமையான குடிவரவு சட்டங்களால் நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தற்போது மனிதநேய ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் Dr வசீஹரன் லக்ஸ் ராஜகோபால் (Dr Vaseeharan Lux Rajagopal), தனது குடும்பத்தின் சிறப்பான எதிர்காலத்திற்காக 2022-ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க (Prabodhya Wijetung)e மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஐக்கிய இராச்சியத்திற்குக் குடிபெயர்ந்தார். கென்ட் (Kent) நகரில் வசித்து வந்த இவர், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2024-இல் காலமானார்.
உள்துறை அமைச்சகத்தின் பிடிவாதம்:
தனது கணவரின் விசாவைச் சார்ந்து பிரித்தானியா வந்த திருமதி விஜேதுங்க, கணவரின் மறைவிற்குப் பிறகு கருணை அடிப்படையில் தங்குவதற்கு அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திடம் (Home Office) இரண்டு முறை விண்ணப்பித்தார். ஆனால், அவரது கோரிக்கைகள் இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நிலவும் இனப்பாகுபாடு மற்றும் ஒரு கலப்புத் திருமணத் தம்பதியினராக (தமிழ் இந்து – சிங்கள பௌத்த) தாங்கள் எதிர்கொண்ட சமூகச் சவால்களிலிருந்து விடுபடவே அவர்கள் பிரித்தானியாவைத் தேர்ந்தெடுத்தனர்.
“நாங்கள் அகதிகள் அல்ல, குற்றவாளிகளும் அல்ல. எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே இங்கு தங்கியிருக்கப் போராடுகிறேன்,” என கண்ணீருடன் கூறுகிறார் பிரபோத்யா.
உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவால், அவர் வேலை செய்வதற்கோ அல்லது தனது பிள்ளைகளை ஆதரிப்பதற்கோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விடுக்கப்பட்ட நிராகரிப்பு உத்தரவுகளால், ஓராண்டுக்கும் மேலாக மன உளைச்சலுக்கு மத்தியில் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தற்போது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. பிஎம்ஏ கவுன்சில் தலைவர் Dr ரொம் டொல்பின் (Dr Tom Dolphin), குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு மருத்துவராகப் பணியாற்றி அந்நாட்டிற்குச் சேவை செய்தவரின் குடும்பத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதி குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
The post மரணித்த NHS வைத்தியரின் மனைவியும் பிள்ளைகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில்! appeared first on Global Tamil News.
