மீண்டும் கவர்னரை சந்திக்க சென்றார் விஜய்.. ஆட்சியமைக்க உரிமை கோரிக்கை – Sri Lanka Tamil News


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், தவெகவின் தற்போதைய பலம் 112 எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இன்னும் எட்டப்படாததால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரி கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கடிதங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக புதிய அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு திமுக வெளிப்புற ஆதரவு வழங்கும் வகையில் ஆலோசனைகள் நடைபெறுவதாகவும், திமுக எதிர்க்கட்சியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளார். இதற்காக அவர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதல்வராக பதவியேற்ற பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் உறுதி அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply