முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணியைப் பாதுகாத்து, அங்கு கல்விசார் அபிவிருத்திகளைத் தொடங்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (பெப்ரவரி 9, 2026) நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பல்கலைக்கழகக் காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாக எழுந்த புகாரையடுத்து, இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக, ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணியை உடனடியாக அளவீடு செய்து, எல்லைகளுக்கு வேலி அமைப்பதென யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா உறுதியளித்தார்.
பல்கலைக்கழக கட்டுமானங்களுக்குப் போதிய நிதியின்மையை நிவர்த்தி செய்ய, முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு பகுதியை வழங்க மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் முன்மொழிந்துள்ளார்.
வேலி அமைக்கப்பட்ட பின், மாவட்டச் செயலகத்தின் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் நா.வேதநாயகன் தான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராக இருந்த காலத்திலேயே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்ததை நினைவுகூர்ந்தார். “முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம்” என அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வவுனியாப் பல்கலைக்கழகம் மன்னாரில் தனது பீடத்தை அமைப்பது போன்று, யாழ். பல்கலைக்கழகமும் முல்லைத்தீவில் தனது தடத்தைப் பதிக்க இது ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையும்.

Tag Words: #MullaitivuUniversity #JaffnaUniversity #EducationDevelopment #LandProtection #GovernorVethanayahan #HigherEducationSL #MullaitivuNews #LKA
The post யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு – கட்டுமான பணிகள் விரைவில் appeared first on Global Tamil News.
