ரீல்ஸ் மூலம் ‘பேய் பங்களா’ என்று வைரலாகி வரும் பாழடைந்த வீட்டின் 17 ஆண்டு கால மர்மங்கள்! – Sri Lanka Tamil News

சென்னை, அசோக் நகரில் அமைந்துள்ள ஒரு பழைய பங்களா, சமீபகாலமாக ‘அமானுஷ்யம் நிறைந்த வீடு’ என்றும் ‘இரவு நேரத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது’ என்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் சிலர் இந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து ரீல்ஸாக வெளியிட்டதால், அப்பகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த வீட்டின் முன் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வதந்திகளுக்குப் பின்னால் ஒரு துயரமான வரலாறு ஒளிந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சரவணன், அவரது மனைவி கஸ்தூரி மற்றும் பணிப்பெண் அன்பரசி ஆகிய மூவரும் இந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், சொத்துக்காக இந்தக் கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், சடலங்களில் நகைகள் அப்படியே இருந்ததால் இது நகைக்காக நடந்த கொலை மட்டும் அல்ல என்று அப்போதைய காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், 2010-ல் சென்னை உயர் நீதிமன்றம் இதனை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி கைது செய்த நான்கு பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், 2013-ல் இந்தத் தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், கொலைக்கும் கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பை காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் போது, காவல்துறையினர் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், வாரிசுதாரர்கள் இன்றி வங்கி லாக்கர்களைத் திறந்தது உள்ளிட்ட பல குறைபாடுகளை உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த மூவர் கொலைக்குக் காரணமான சதித்திட்டம் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

அப்பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், இங்கு அமானுஷ்யம் இருப்பதாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுக்கின்றனர். “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு எந்த சத்தத்தையும் நாங்கள் கேட்டதில்லை, இது வெறும் வதந்தி” என்று அவர்கள் கூறுகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply