சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.
அந்த வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமயங்களில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரண்டு முறை தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் சென்னையில் 22 கார்ட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.88,600-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.648 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.97,744-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,200-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 167-க்கு விற்பனை ஆகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதோடு ஐப்பசி மாதம் முகூர்த்த நாட்களி சுப விசேஷங்கள் நடைபெறும். அதனால் தங்கம் விலை மேலும் உயரும் என்பது வணிக துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக கடும் வீழ்ச்சி கண்டிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.