வெனிசுலா நிலநடுக்கம்: பலி 164 ஆக உயர்வு; 970-க்கும் மேற்பட்டோர் காயம் – அதிபர் அவசரநிலை அறிவிப்பு – Sri Lanka Tamil News

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெனிசுலாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாகவும், 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. முதல் நிலநடுக்கம் தலைநகர் காரகஸில் இருந்து மேற்கே சுமார் 168 கி.மீ. தொலைவில் உள்ள மோரோன் என்ற பகுதியை மையமாகக் கொண்டு 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடம் கழித்து இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

7.5 ரிக்டர் அளவுகோல் கொண்ட இந்த நிலநடுக்கம், மோரோனுக்கு தென் மேற்கே 16 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. 1900-க்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாகவும், 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“இடிந்து விழுந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். லா குவைரா மாநிலமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. யாரையெல்லாம் காப்பாற்ற முடியுமோ அவர்களைக் காப்பாற்றும் கடினமான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். லா குவைரா மாநிலம் ஒரு பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறது. அது ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது” என டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவ அமெரிக்க அரசின் அனைத்து அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “வெனிசுலா நாட்டு மக்கள் மீது தாக்கிய இரண்டு பெரிய நிலநடுக்கங்களும் மிகப் பெரிய அளவில் இருந்தன. அவை பேரழிவை ஏற்படுத்தும் வகையிலானவை. வெனிசுலாவுக்கு உதவ அமெரிக்கா விருப்பத்துடனும் தயாருடனும் உள்ளது. எங்கள் புதிய மற்றும் சிறந்த நண்பர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவு ஆழமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களின் விளைவாக துயரமான சூழல் நிலவும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலையும், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். கடினமான காலங்களில் எங்கள் மக்களிடையே நிலவும் ஒத்துழைப்பு உணர்வுக்கு ஏற்ப இந்தியாவின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு மீட்புக் குழுக்களை அனுப்ப பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் முன்வந்துள்ளன. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply