ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மட்டத்திலான தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவினால் பிரபல பெண் தொழிலதிபர் ஹரிணி விஜேதுங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட அமைப்பாளர்களாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷவினால் நேரடியாக வழங்கப்பட்ட இந்த நியமனங்கள், வரவிருக்கும் அரசியல் காலப்பகுதிக்கு முன்னதாக கட்சியின் கட்டமைப்புக்குள் தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் ஊடக ஆளுமைகளை உள்வாங்கும் நோக்கை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் வர்த்தகத் துறையில் முக்கிய நபராகவும், அர்ப்பணிப்புடன் கூடிய சமூக சேவை ஆர்வலராகவும் விளங்கும் ஹரிணி விஜேதுங்க, கொழும்பு மாவட்டத்தின் அமைப்பாளர் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அதேவேளை, கருப்பையா ராமகிருஷ்ணன் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருந்தோட்டத் துறை மற்றும் விளையாட்டுத் துறையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், தற்போது இலங்கை விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
அவரது பரந்த தொடர்பாடல் அனுபவம் மற்றும் ஊடக ஆளுமை மலையகத்தில் கட்சியின் பலத்தை அதிகரிக்க உதவும் என கருதப்படுகிறது.
இந்த நியமனங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் பிராந்திய கிளைகளை வழிநடத்த பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை இணைத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
Post Views: 6
