80
தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை பய்படுத்துவதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்படக்கூடிய பாரிய ஆபத்துக்கள் குறித்து எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுவரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பழைய (தரமான) நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல், மின் உற்பத்தி நிலையம் முழுமையாகப் புதிய நிலக்கரியையே நம்பி இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரியை 24 மணித்தியாலங்களும் பயன்படுத்துவதால், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திலுள்ள பாரிய மின்பிறப்பாக்கிகள் மற்றும் இயந்திரங்கள் கடுமையாகச் சேதமடையக்கூடும்.
அத்துடன் நுரைச்சோலையில் உள்ள இரண்டு அல்லது மூன்று இயந்திரங்கள் செயலிழந்தால், நாடு தழுவிய ரீதியில் பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதற்கு மாற்றீடாக டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மின்சாரக் கட்டணம் மீண்டும் பெருமளவில் அதிகரிக்கக்கூடும்.
“மழை இல்லாத இந்தக் காலத்தில் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பது அவசியம். அரசாங்கம் உடனடியாகப் பொறியியலாளர்களைச் சந்தித்து, இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியான முடிவை எடுக்க வேண்டும்” என கலாநிதி விதுர ரலபனாவ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களே இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு வழிவகுத்ததாக மின்சார சபை பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
#Norochcholai #PowerCrisis #Lakvijaya #SriLankaNews #ElectricityGrid #CoalIssue #EnergyExpert #LKA #PowerCutWarning
