46
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) மரணம் குறித்து கடந்த 2026 பெப்ரவரி 14 அன்று, பிரித்தானியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. நவல்னி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 அன்று ஆர்க்டிக் சிறையில் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வகங்கள் அவரது மரணத்திற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
நவல்னியின் உடலில் ‘எபிபாட்டிடின்’ (Epibatidine) என்ற கொடிய நஞ்சு இருந்ததை ஆய்வகங்கள் கண்டறிந்துள்ளன. இது தென் அமெரிக்காவில் உள்ள ‘ஈட்டி தவளைகளின்’ (Dart Frogs) தோலில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷமாகும் (Neurotoxin).
இந்த வகை விஷம் ரஷ்யாவின் இயற்கைச் சூழலில் எங்கும் காணப்படுவதில்லை. எனவே, இது திட்டமிட்டு அளிக்கப்பட்ட ஒரு இரசாயன ஆயுதம் என பிாித்தானியா , பாரிஸ், பேர்லின் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விஷம் உடலில் புகுந்தால் பக்கவாதம், சுவாசத் தடை மற்றும் மிகக் கொடூரமான மரணத்தை ஏற்படுத்தும்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்:
“ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவல்னிக்கு இந்த விஷத்தை வழங்க ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. இது ஒரு மிலேச்சத்தனமான கொலை.” என தொிவிக்கப்பட்டுள்ளது
நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya), “எனது கணவர் கொல்லப்பட்டது இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது; புட்டின் ஒரு கொலையாளி” என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
வல்னி ‘எபிபாட்டிடின்’ (Epibatidine) எனும் நஞ்சு மூலம் கொல்லப்பட்டதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராகி வருகின்றன:
பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யவெட் கூப்பர் (Yvette Cooper), ரஷ்ய ஆட்சிக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து புதிய தடைகளை ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்த நஞ்சை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள இரசாயன ஆய்வகங்களுடன் தொடர்புடைய நபர்கள் மீது இந்தத் தடைகள் பாயக்கூடும்.
மேலும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் சர்வதேச இரசாயன ஆயுதத் தடை அமைப்பிடம் (OPCW) ரஷ்யாவிற்கு எதிராக உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்துள்ளன. இரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்தை (Chemical Weapons Convention) ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நஞ்சு செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுவதால், இது ஒரு ‘உயிரியல் ஆயுதம்’ (Biological Weapon) என்ற கோணத்திலும் OPCW விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஐரோப்பிய நாடுகளின் இந்த ஆய்வறிக்கையை அமெரிக்கா சந்தேகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள “ரஷ்யாவிற்கு மட்டுமே இதற்கான வாய்ப்பும் நோக்கமும் இருந்தது” என்ற கருத்தை வாஷிங்டன் ஏற்றுக் கொண்டுள்ளது.
Tag Words:
#AlexeiNavalny #RussiaNews #FrogVenom #Putin #HumanRights #BreakingNews2026 #LKA #Epibatidine
