சிந்துபாத்தி மயானத்தின் கட்டுமானத்தின் கீழும் என்புக் கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் (2026 மே 06, புதன்கிழமை) மேலும் மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் விரிவடைந்து வரும் நிலையில், மனித எச்சங்கள் அருகிலுள்ள மயானத்தின் கட்டுமானங்களுக்குக் கீழும் காணப்படுவதால் அகழ்வுப் பணியில் புதிய சவால்கள் எழுந்துள்ளன.

 ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து இன்று 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகப் பூமியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.  இன்று மேலும் ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், அதன் பெரும் பகுதிகள் அருகிலுள்ள மயானத்தின் எரிமேடை கட்டுமானத்திற்கு அடியில் காணப்படுகின்றன.  எரிமேடைக்குக் கீழ் காணப்படும் அந்த எலும்புக்கூட்டைச் சேதமின்றி அகழ்ந்தெடுப்பதற்கான சுத்திகரிப்புப் பணிகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரையிலான  காலப்பகுதியில்  மொத்தமாக   256எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட  நிலையில்  252 எலும்புக்கூடுகள்  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, அங்கு புதைக்கப்பட்டவர்களின் அளவு ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மயானத்தின் எரிமேடை மற்றும் ஏனைய கட்டுமானங்களுக்குக் கீழும் எலும்புக்கூடுகள் காணப்படுவது, குறித்த கட்டுமானங்கள் அமைப்பதற்கு முன்னரே இந்தப் புதைகுழி அங்கு இருந்திருக்கலாம் அல்லது புதைகுழியின் உண்மைத் தன்மையை மறைக்க இக்கட்டுமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்புகிறது. சட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் அகழ்வாய்வுத் துறையினர் இந்தச் சிக்கலான பகுதியை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

#ChemmaniExcavation #MassGraveUpdate  #HumanRemainsJaffna  #ForensicArchaeology #TruthAndJustice

The post சிந்துபாத்தி மயானத்தின் கட்டுமானத்தின் கீழும் என்புக் கூடுகள் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply