பாதயாத்திரை குழுவுடன் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய நபர் கைது – Sri Lanka Tamil News

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சென்ற சுப்பிரமணியன் என்ற நாயை உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் 21 வயது நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்ட குழுவினருடன் சென்ற நாயை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூன் 27 மாலை கல்முனை பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, 21 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நாய், யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பயணித்து வந்த “சுப்பிரமணியன்” என அழைக்கப்படும் நாய் என தெரியவந்துள்ளது.

சுமார் 450 கிலோமீற்றர் தூரம் அந்தக் குழுவினருடன் பயணித்து வந்த நாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இச்செயலை மனிதாபிமானமற்ற செயல் என இந்து அமைப்புகளும் கண்டித்துள்ளன. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுவதற்கு முன்னர், குறித்த நபர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply