அழியும் அபாயத்தில் உள்ள நல்லூர் மந்திரி மனை: பாதுகாப்பதற்கு நிதியுதவி கோரி சி.வீ.கே.சிவஞானம் அழைப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுப் பாரம்பரியமிக்க நல்லூர் மந்திரி மனையை அழியாது பேணிப் பாதுகாப்பதற்கான புனரமைப்புச் செயற்பாடுகளில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

நீண்டகாலமாகச் சிதைவடைந்து, அழியும் அபாய எதிர்கொண்டிருந்த மந்திரி மனையைப் புனரமைப்பது தொடர்பாக, அதன் தற்போதைய நம்பிக்கைப்பொறுப்பாளர்களும் இலங்கைத் தொல்லியல் திணைக்களமும் சுமுகமான உடன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போதைய சூழலில் இப்புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான போதிய நிதித் வசதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை எனக் கூறப்படும் நிலையில், இருதரப்புக் கலந்துரையாடல்களின் பின்னர் பொதுமக்களின் பங்களிப்புடன் நிதியைத் திரட்டி இப்பணியை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் நேரடித் தொழில்நுட்பக் கண்காணிப்பின் கீழ் இந்தத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அதற்கான நிதியை வழங்குவதற்கு ஒரு பொது அமைப்பாக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். இதன் முதற்கட்டமாக, நெதர்லாந்து நாட்டின் நிபுணர்களின் ஆலோசனையுடனும் பங்களிப்புடனும் மந்திரி மனை அமைந்துள்ள வளாகத்தில் அதிநவீன ஸ்கான் (Scan) தொழில்நுட்பப் பரிசோதனைகள் திணைக்களத்தால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. எமது வரலாற்று அடையாளத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் இந்த உன்னத முயற்சிக்கு, உலகளாவிய ரீதியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பையும் நிதியுதவிகளையும் வழங்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply