20
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, தமிழ்த் தேசியக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறானதொரு தீவிர அரசியல் விவாதத்திற்கு மத்தியில், வைத்தியசாலையை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான தீர்மானங்கள் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாகாண அதிகாரப் பறிப்பா? அபிவிருத்தியா? – வெடித்தது விவாதம்
தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதன் மூலமே போதிய நிதியுதவிகள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் விசேட நிபுணர்களை நியமிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ச. சிறிபவானந்தராசா ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு இலங்கைத் தமிழரசு கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
“மாகாண சபைகளுக்கு என 13ஆம் திருத்தத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மத்திய அரசாங்கம் மீண்டும் பறித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் மாகாணப் பாடசாலைகளை ‘தேசிய பாடசாலைகள்’ ஆக்குவதாகக் கூறி மத்திய அரசு ஆக்கிரமித்ததன் தொடர்ச்சியே இது” என தமிழ்த் தேசியத் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஏற்கனவே மத்திய அரசின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே போதிய உட்கட்டமைப்புகள் மற்றும் ஆளணி வெற்றிடங்கள் நிலவும் போது, தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்தியிடம் ஒப்படைப்பதால் மட்டுமே சகல வசதிகளும் கிடைத்துவிடும் என்பது ஏமாற்று வேலை எனச் சுட்டிக்காட்டினார்.
சபையில் நீடித்த கூச்சல் குழப்பம் – தர்க்கத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த 18ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா இத்தீர்மானத்தை நிறைவேற்ற முயன்ற போது பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன்போது, மத்தியிடம் வைத்தியசாலையை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வி. அருச்சுனா மற்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, சபை நாகரிகம் அன்றி ஒருமையிலும் விளித்துத் தர்க்கப்பட்டனர். கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் (19ஆம் திகதி) கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், தமிழ்த் தேசியத் தரப்பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இத்தீர்மானம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி விஜயமும் 3 தெரிவுகளும்
இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த சனிக்கிழமை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். வைத்தியர் குழாம் மற்றும் நலன்புரி சங்கத்தினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மூன்று முக்கிய தெரிவுகளை (Options) முன்வைத்தார்:
-
முதலாவது தெரிவு: வைத்தியசாலையை வட மாகாண சபையின் கீழேயே தொடர்ந்து வைத்திருப்பது; அதேநேரம் அதற்குத் தேவையான நிதி, புதிய உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை மத்திய அரசு மூலமாக வழங்குவது.
-
இரண்டாவது தெரிவு: புற்றுநோய் பிரிவை மட்டும் ஒரு விசேட பிரிவாக (Specialized Unit) மத்திய அரசு (Line Ministry) பொறுப்பேற்பது.
-
மூன்றாவது தெரிவு: முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவது.
இது குறித்து மேலும் விரிவான தகவல்களைத் திரட்டவும், இறுதி முடிவை எடுக்கவும் அமைச்சின் சார்பில் ஒரு விசேட குழு நியமிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக இந்த வைத்தியசாலையை உடனடியாக ‘மாவட்ட பொது வைத்தியசாலையாக’ (DGH) தரம் உயர்த்த முடியாது என்பதையும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
2027க்குள் புதிய கட்டிடத் தொகுதி
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் பணிகளைத் துரிதப்படுத்தி 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் போது தேவையான நவீன மருத்துவ உபகரணங்களும் ஆளணிகளும் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்க்கப்பட்டு, 2011இல் மீள ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்களின் பிரதான மருத்துவ ஆதாரமாகும். “சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் சேவை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டது போல, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வைத்தியசாலையின் உண்மையான அபிவிருத்திக்கு அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#TellippalaiHospital #Jaffna #NorthernProvincialCouncil #CentralGovernment #MinistryOfHealth #NationalPeoplesPower #NPP#ITAK
