கியூபாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தம்: கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஒப்புதல்! 

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தாராளமய சந்தை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரகால பொருளாதாரத் திட்டத்திற்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் தீவிர நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்களின்படி, கியூபாவில் தனியார் வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், கியூபா வரலாற்றில் முதல்முறையாக தனியார் நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும், ஒருவரே பல தனியார் வணிகங்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் வாழும் கியூபர்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதற்கும், தனியார் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் குறித்து கியூபா அதிபர் மிகுவெல் டயஸ்-கனெல் (Miguel Díaz-Canel) மற்றும் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) ஆகியோர் தங்களின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு வெளிப்புறக் காரணிகள் மட்டுமன்றி, உள்நாட்டு நிர்வாகத் தடைகளும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட அதிபர், இச்சீர்திருத்தங்கள் கியூபாவின் சோசலிசக் கொள்கையிலிருந்து விலகுவதைக் குறிக்காது என்றும், மாறாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் சந்தை சார்ந்த பொருளாதார மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கியூபாவின் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் டிஜிட்டல் அந்நியச் செலாவணி சந்தை மற்றும் வலுவான புதிய வரி விதிப்பு முறையும் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply