60
பிரான்ஸின் அதிநவீன சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) விமானந்தாங்கி போர்க்கப்பல் குழு இன்று (2026 மே 06, புதன்கிழமை) சூயஸ் கால்வாயைக் கடந்து தெற்கு செங்கடல் பகுதியை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகப் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியா மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு முன்னெடுப்பிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்த இராணுவ நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் பங்காளி நாடுகள் இணைந்து ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. கடந்த ஏப்ரல் 17-ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சர்வதேச உச்சிமாநாடு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் பாரிஸில் நடைபெற்றது. இதில் 51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறித்த மாநாட்டிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), சர்வதேசக் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கும் பன்னாட்டுக் குழுவிற்குப் பிரான்ஸும் பிரித்தானியாவும் தலைமை தாங்கும் என அறிவித்திருந்தார்.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இந்த விமானந்தாங்கி குழுவின் வருகையானது வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளித்தல், கடல் வழித்தடங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு (Mine-clearing) ஆதரவு வழங்குதல், புதிய பாதுகாப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்புச் சூழலை மதிப்பீடு செய்தல், பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக நெருக்கடி காலப் பதிலளிப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும்:
இந்த இராணுவ நகர்வானது இப்பகுதியில் தற்போது நடைபெற்று வரும் ஏனைய இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தனித்துச் செயற்படும் எனவும், தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் பிரான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
சார்லஸ் டி கோல் விமானந்தாங்கி கப்பல் குழுவின் செங்கடல் நோக்கிய வருகை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் ஐரோப்பிய நாடுகளின் பலமான பிரசன்னத்தை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அப்பாலுள்ள கடல்சார் பாதைகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் , பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் இந்த நகர்வு வர்த்தகக் கப்பல் நிறுவனங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இது வெறும் இராணுவக் காட்சிப்படுத்துதல் மட்டுமல்லாமல், உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான இராஜதந்திர நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
#CharlesDeGaulle #RedSeaSecurity #FrenchNavy #SuezCanal #MaritimeSecurity
