
இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்மட்ட வளிமண்டல குழப்ப நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலையும் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
