யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களே வெசாக் கூட்டினைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இது குறித்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் விசமப் பிரசாரங்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பௌத்த மாணவர்களால் வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது. சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகமும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, சனிக்கிழமை நிகழ்வுகள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நிறைவடைந்தன.

ஞாயிற்றுக்கிழமை (மே 31) இரவு நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்த பின்னர், பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் ஏறிப் பாய்ந்து உள்நுழைந்த அடையாளம் தெரியாத இருவர், பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதைக் கண்ட கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் சென்றபோது, அவர்கள் மீண்டும் மதில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், நள்ளிரவு 12:50 மணியளவிலும் அவர்கள் மீண்டும் மதில் வழியே குதித்து உள்நுழைந்தபோது, பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் பீடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். மறுநாள், பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிவுறுத்தலின் பேரில் பதிவாளரினால் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர விசாரணைகளைக் காவல் துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் சுமுகமான இயக்கத்தைக் குலைக்கவும், தமிழ் – சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வையும் இன நல்லுறவையும் சீர்குலைக்கவும் திட்டமிட்டே வெளிநபர்களால் இந்தச் சதி முயற்சி மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும், வழமையான கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பீடாதிபதி, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளைப் புறக்கணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply