uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை

நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, குறித்த பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சலுகைகளை வழங்கவும் தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில்,

செயலி வழிப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் முறையான ‘தொழில் வழங்குநர் – பணியாளர்’ (Employer-Employee relationship) உறவுநிலை சட்டரீதியாகத் தெளிவாக இல்லாதபோதும், அவர்களை ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

இவ்வாறான பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.

பொதுவாக ஒரு பணியில் சேரும்போது வழங்கப்படும் நியமனக் கடிதம், கடமைக்கு வரும் மற்றும் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளைக் கொண்டே ஒரு பணி உறவு தீர்மானிக்கப்படுகிறது.

எனினும், செயலி வழிப் பணிகளில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லாத சூழலிலும் இவர்களுக்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தில் ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் அமைச்சின் மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, குறித்த செயலிகளில் பணியாற்றுபவர்களில் 60 சதவீதமானோர் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டே பகுதிநேரமாக இந்தப் பணிகளைச் செய்கின்றனர். எஞ்சிய 40 சதவீதமானோர் இதனை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

முழுநேரப் பணியாளர்களாக அடையாளம் காணப்படும் 40 சதவீதமானோரைத் தனியாக வகைப்படுத்தி, அவர்களை முறையான சமூகப் பாதுகாப்பு முறைமைக்குள் இணைக்க அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, முறையான தொழில் வழங்குநர் ஒருவரை அடையாளம் காண முடியாத சூழலிலும், இவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய (EPF) வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

 

Post Views: 7

நன்றி

Leave a Reply