யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 28ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் 5 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு, சான்றுப் பொருட்களாக சிறு பாசிமணித் துண்டு, கைவளையல், ஆணிகள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் என்பனவும் அகழ்வுக் குழுவினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுத் தளத்தில் தற்பொழுது பாரிய உலோகத் துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குள் மனித என்புக்கூடுகள் காணப்படுவதனால், அவற்றைச் சேதமடையாமல் பக்குவமாகச் சுத்தப்படுத்தும் நுணுக்கமான பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய, செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் போது 387 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 367 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, இலங்கை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்களும் நாளை வெள்ளிக்கிழமை இப்பகுதிக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
