74
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கா தனது மூன்று பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகத்தின் (U.S. Central Command) தகவல்படி, நிமிட்ஸ் ரகத்தைச் சேர்ந்த USS ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (CVN 77) உள்ளிட்ட மூன்று போர்க்கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஏப்ரல் 23 ஆம் திகதி நிலவரப்படி, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோடிக்கணக்கான டொலர் பெறுமதியான இந்த நவீன போர்க்கப்பல்கள், நூற்றுக்கணக்கான போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
